Monday, 27 January 2020

கடுங்காப்பி


துக்கவிசாரணைக்கு 
இடையில்
காப்பி வந்தது

வழக்கமாக காப்பியை
மறுக்கும் யாரும்
அப்படிச் செய்யவில்லை

காப்பியை குறித்து
பேசும் எவரும்
அது பற்றி பேசவில்லை.

காப்பியும்
வழக்கம் போலிருக்கவில்லை

நாசியைச் சீண்டும்
மணமின்றி ஒளிகுன்றி

சிறுகுமிழிகள் விம்மி வெடிக்க
முகம் கறுத்து

இரண்டு கைகளுக்கும்
இடையிலொரு
கசந்த பிரார்த்தனையைப் போலிருந்தது.

குரல்வளையை இறுக்கிப்பிடிக்கும் 
இந்த திரவ துக்கம்

முன்னறையிலிருந்து ஓடோடி
படுக்கையில் விழுந்து
அழும் சிறுமியுமாயிருக்கிறது.








No comments:

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...