Wednesday, 4 March 2015

அந்த மரம் பஸ்ஸுக்குக் காத்திருக்கிறது


ஊரோடு கோபித்துக்கொண்டு
ஒதுங்கி நிற்கும் அந்த மரம்
தலைமயிரை அள்ளிக்கட்டி
கண்ணீரை அவிழ்த்துவிட்டு
தாய் வீட்டின் வழியேகும்
அபலையென
பஸ்ஸுக்குக் காத்திருக்கிறது..

தூக்கத்திலிருந்ததை தட்டியெழுப்பி
நெடுஞ்சாலை  விரிவாக்கம்
உறுதியென்று
பொக்லைன் சொன்ன நாள் முதலாய்
உடல் நடுங்குமது
ஆளண்டாப் பெருவனஞ்சேர்க்கும்
பேருந்து வரப்பார்க்கிறது.

பச்சைக்குருதிப்புண்ணை
ஃப்ளெக்ஸ் பருந்து கொத்திக் குடைய
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு
அடுத்து வரும் வண்டியை மறித்து
கையை நீட்டுகிறதம்மரம்

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...