Tuesday 24 November 2015

கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் நிலவு



ஒளிந்து
விளையாடுவதை 
கற்றுக் கொள்ளவே 
ஒரு மாதமாகிறது 
மக்கு நிலாவுக்கு



ஒவ்வொரு ஊரிலும் ஒரு எஸ்.செந்தில்குமார்


சோட்டா பீம், இந்துமதி, 
சுட்கி, காளியா,ராஜூ 
டோலு மற்றும் போலுவோடு 
சேர்ந்து விளையாட 
பெருவிருப்பம் கொண்ட
எஸ்.செந்தில் குமாருக்கு 
ஏக்கத்தில் காய்ச்சலே வந்து விட்டது 
சாவி கொடுத்தால் ஓடும் 
பந்தயக் காரொன்றைப் பரிசளித்து 
மடைமாற்றப் பார்க்கிறாள் அம்மா 
வீட்டிலிருந்து வீதிக்கு இறங்கி 
இடம் வலமாய் திரும்பி 
சாலையைப் பிடித்து 
டாப் கியரில் 
வேகமெடுக்கும் அந்தக் கார் 
இன்னும் சில நிமிடங்களில் 
டோலக்பூரை அடைந்து விடும்.


புதிய வார்ப்புகள்


அவனது மேசையில் அணிவகுத்து நிற்கின்றன
வெள்ளை ரோஜாக்கள்.
இன்னும் சில நொடிகளில்
அவை பரோட்டாக்களாக உருமாறும்.
தாமரை இலைகளென நீள் வட்டங்களையும்
கருவிகளின்றி
துல்லிய வளைவுகளையும்
மாவுக்கிண்ணத்தால் வரைந்து தள்ளுகிறான்
புதிய வார்ப்புகளின் கர்த்தா.
புத்தம் புதிய வண்ணச்சித்திரங்கள்
ஆம்லெட்டுகளில்.
பின்னணி இசை சேர்த்த கொத்து பரோட்டா
சண்டைக் காட்சிகள்.
வெண்புகைசூழ் கனவுகளை ஆள்கிறாள்
ஆக்கிப் போட வருவதாக வாக்களித்த தேவதை.
( கவனம்,வெள்ளுடுப்பில் அப்பிக்கொள்ளப்
போகிறது அடுப்புக்கரி)
துவையல் அரைக்கும் தருணங்களில்
புறங்கையால் கூந்தல் திருத்தும்
கணப்பொழுது திரும்பத்திரும்ப..... திரும்பத்திரும்ப.....
’லைனுக்கு ரெண்டு ஆனியன் ரோஸ்ட்’டில்
துண்டிக்கப் படுகிறது அந்த காதல் காட்சி.


Thursday 19 November 2015

இழவு வீட்டுக் குழந்தை

அழ வேண்டுமா 
சிரிக்க வேண்டுமா
ஒரு எழவுந்தெரியவில்லை
அந்தக் குழந்தைக்கு 
படுக்க வைத்திருந்தவனை 
கொஞ்ச நேரம் வெறித்து விட்டு
அவனது வண்டியருகில் போய் நின்று கொண்டது
யாரோ தூக்கி அதில் உட்காரவைத்தார்கள் 
அபத்தஞ்செய்துவிட்ட தன் கையை 
பறையில் அறைந்து கொண்டான் கடவுள்.




Tuesday 17 November 2015

A T M பூதகணங்கள்



நமது கற்பிதங்களின்படி இல்லை
புதையல் காக்கும்
பூதங்களின் வாழ்வு

கற்பகவிருட்சத்தின் மறைவில்
ஒரு வேதாளம்
பொத்தல் பனியனோடு 
சட்டையை மடித்துக் கொண்டிருக்கிறது

நரக்கறி சீந்தாது
போசியும் பருக்கையுமாய்
பதுங்கிய
சைவக்காட்டேரியைப் பார்த்தேன்

பெட்டிக்கடை
அடைக்கப்படுமுன்
நெருப்புக் குச்சிகளை
சேகரித்துக் கொள்ளும் பிசாசின்
வாயினுள் கொள்ளியில்லை.

நுரையீரல் கோத்த நீர்
நாசிக்காற்றில்
சலசலக்கும் சிறு நதியென.

பூதங்கள் அனாதைகளல்ல
நிறுவனமிருக்கிறது
சீருடையிருக்கிறது
ஷூக்கள் இருக்கின்றன
விடை தர
ரப்பர் வளைக்கரங்களிருக்கின்றன
அவைகளுக்கு
குழப்பங்களும் கேள்விகளும் இருக்கின்றன

வருபவனெல்லாம்
ராஜனாயிருக்கிறான்
ராஜாக்கள் எல்லோருக்கும்
சங்கேதம் தெரிந்திருக்கிறது.

செய்தித்தாளை
மனனம் செய்வதற்கும்
கதவை மெதுவாக திறக்கும்படி
வேண்டிக் கொள்ளவுந்தான்
காவல் பூதங்கள் படைக்கப்பட்டனவா

ராப் பகலாய்  காத்திருந்தும்
கண் கொண்டு பார்ப்பதில்லை
இந்தப் பணங்காய்ச்சி
யாவர்க்கும் கொட்டித்தீருமதன்
சுருளாத் தளிரிலைகள்
பர்ஸுகளில் நிரம்பப் பார்த்து
மூச்சை நெருப்பாய் விடுவதுதான்
பூதங்களின் வேலையா


ஆனந்த விகடன் 18.11.15






பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...