Monday 11 November 2019

திருவருணைக் காப்பு


முன்னங்கால்கள் இல்லாத நாய்க்குட்டி
தன்னிடம் உள்ளதென்றாள்.

’கருணையம்மா கருணை’ என்றேன்.

’பின்னங்காலிரண்டும் நசுங்கி விட்ட
பூனையொன்றும் என் பிள்ளை’ என்றதும்தான்
’அருணை அருணை’
என்றந்தக் கைகளை பிடித்துக் கொண்டேன்.

’தரையுரசும் பூனைமுலைக்கு
பளிங்குத்தள வீடு பார்த்தோம்’
என்றவள் சொன்ன போது
வாயிழந்து கரங்குவித்தேன்.

மாலைக் கண் நோய் கொண்ட
இன்னுமொரு நாய்க்குட்டி
உண்டெனச் சொல்லுகையில்
உடைந்திருந்தேன்.

‘கருப்பு வெள்ளைக் காட்சிகளில்
வெள்ளை மட்டும் மங்கி விடும்
மற்றபடிக் குறையில்லை ‘ என்றாளே

உள்ளத் திருவோட்டில்
ஒரு பருக்கை கூட இல்லை.

ஐயன்மீர்!
தங்கள் வசம் உள்ளவற்றில்
நல்லதொரு சொல் இடுக

அன்னையின் முழுக்கிற்கு இன்னும்
ஆயிரஞ்சொல் வேண்டும்!





Saturday 9 November 2019

இந்தக் கடலில் ஒரு சிட்டிகை உப்பில்லை

கடலின் கரையில் என்னத்தை தேடுகிறாய் நங்கை?

உன் மகள் சங்குகளை சேகரிக்கிறாள் பார்த்தேன் .

நீ எதை தேடுகிறாய் நங்கை? 

கொற்றவை வெறிப்பதுபோல் 

ஏன் இப்படி கடலை வெறிக்கிறாய்? 

நான் கவனித்தேன் 

ஆண்களைத் தவிர்த்து அலைகளையே பார்க்கிறாய்

உனது ஒரு தம்ளர் பௌர்ணமியையும்   

கடல் குடித்துவிட்ட கதையை 

உம் கொட்டிக் கேட்கிறாள் மகள். 

இந்தப்பெருங்கடலின்வசம்

 தாகத்துக்கொரு மிடறில்லை

நம் வாழ்வு ருசிக்க  

சிட்டிகை உப்புமில்லை மகளே

ஆல்பத்தின் எல்லாப் புகைப்படங்களிலும்  

நீயும் மகளும் கடலும் இருக்கிறீர்கள்

யாரும் எதிலும் சிரித்துக் கொண்டில்லை 

நேற்றென் கனவில்                                                                             

நானோர் காட்சியை நிறுவினேன் நங்கை.

நீயும் மகளும் நடந்து வர                                                                        

கழுவிய பாதையை விரிக்கிறது கடல்.

பழுப்பில் வெள்ளி பூத்த சிப்பியொன்றை                                                        

மகளுக்குப் பரிசளித்து                                                                                  

பாதங்களை முத்திக் கொள்கிறது.




Saturday 2 November 2019

எழுமின்!

தாழத்தரை
வீழ்ந்த
நிழல்
மெதுவாய்
மெது மெதுவாய்
நிலமூர்ந்து
ஊர்ந்தூர்ந்து
மரம் பற்றி
கிளையேறி
வனமேறி
மலையேறி
வானேகி
இருளாகி
இரவாகி
கனிநிலவை
கவ்விற்றே காண்.


பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...