Wednesday 11 March 2015

நோஞ்சான்களை காணச்சகிப்பதில்லை


நா வரள
கை  நீட்டியது
எலும்பு துருத்திய  மரம்.
நோஞ்சானைக்
காணச்சகியாமல்
சன்னலுக்கருகிருந்த
தண்ணீர்போத்தலை
பைக்குள் வைத்தேன்.
பேருந்து இறங்கஇறங்க
உயர்த்திக்காட்டுகிறது.
கண்டுகொள்ளவேயில்லை.
அடிவாரம் சேர்ந்ததும்
ஓரக்கண்ணால் பார்க்க
விரிசல் விட்டிருந்தது வானம்.

Wednesday 4 March 2015

அந்த மரம் பஸ்ஸுக்குக் காத்திருக்கிறது


ஊரோடு கோபித்துக்கொண்டு
ஒதுங்கி நிற்கும் அந்த மரம்
தலைமயிரை அள்ளிக்கட்டி
கண்ணீரை அவிழ்த்துவிட்டு
தாய் வீட்டின் வழியேகும்
அபலையென
பஸ்ஸுக்குக் காத்திருக்கிறது..

தூக்கத்திலிருந்ததை தட்டியெழுப்பி
நெடுஞ்சாலை  விரிவாக்கம்
உறுதியென்று
பொக்லைன் சொன்ன நாள் முதலாய்
உடல் நடுங்குமது
ஆளண்டாப் பெருவனஞ்சேர்க்கும்
பேருந்து வரப்பார்க்கிறது.

பச்சைக்குருதிப்புண்ணை
ஃப்ளெக்ஸ் பருந்து கொத்திக் குடைய
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு
அடுத்து வரும் வண்டியை மறித்து
கையை நீட்டுகிறதம்மரம்

நான்கு அங்குலத்தூரிகை

தினமொரு நிறக்குழம்பில்
முங்கித்திளைக்கும் பெயிண்ட் பிரஷ்
பிரபஞ்சத்தின்
திக்கெட்டுக்கும்
வண்ணம் பூசிவிட முடிவெடுத்து
விடியற்காலை ஐந்துமணிக்கெல்லாம்
பொள்ளாச்சியிலிருந்து பஸ்ஸைப்பிடித்து விடுகிறது.
எப்பேர்பட்ட அவமானத்தையும்
துடைத்தெடுத்துவிடும் டர்பைன்டாயில்
தன்வசம் இருப்பதாக பீற்றிக் கொள்ளும்
அந்த நாலு இன்ச் பிரஷ்
நாள்பட்ட காயங்களை
சுரண்டியெறியும் பட்டித்தகடு ஒன்றையும் உள்ளாடைக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.
பிரஷுக்கொரு கைப்பேசியும்
கைப்பேசிக்குள்ளொரு வரவேற்பறையும்
வரவேற்பறைக்குள்ளொரு சிப்பந்தியுமுண்டு
சிப்பந்தி இளையராஜாவுக்கு மாதம் பதினைந்து ருபாய் சம்பளம்.
வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாது பொன்னோவியத்தை வரைந்து காட்டப்பணிக்கப்பட்டிருக்குமந்த அடிமைக்கு
ஆண்டையும் அடிமை.
ஞெகிழியுறைக்குள் பத்திரப்படுத்தியிருக்கும்
குட்டி பிரஷ் வரைந்த சிறுவர்மலர் பக்கத்தை
காட்டும்போது துளித்தண்ணீர் சொட்டுகிறது பிரஷிலிருந்து.
சிற்றுளியும்
பொடித்தூரிகையும்
மயிற்பீலியும்
உண்டுறையுமிப்பேருலகில்
ஒரு நான்கு அங்குலம்
காலியில்லையா
நீலவண்ணா

_ மணல்வீடு





Tuesday 3 March 2015

பட்டினத்தார் காலத்தில் லெகின்ஸ் பயன்பாட்டில் இல்லை


முன்னோடும் வண்டியின்
பின்னிருக்கை திரட்சிக்கு
கால்களுக்கிடையிருந்து
முன்னோக்கிப்பாயும்
நமது ஸ்ப்ளெண்டர்
நமது ஸ்ப்ளெண்டராயில்லை பட்டினத்தாரே

மதன்மித்ரா பீமபுஷ்டி
பல்ஸராகிப் பாய்கிறதே
பட்டினத்தாரே

_காலச்சுவடு183
மார்ச்2015

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கசியும் பாடல்



கர்ப்பிணிப் பெண்ணின்
முலைகளென
பூரித்த கருணையோடு
அரவணைத்துக்கொள்கிறது
நோய்மை
இந்தக்கதகதப்பு
தனிமையில் உறைந்த
விரல்களுக்கு
எத்தனை ஆதூரமாயிருக்கிறது
உறக்கத்திற்கும்
மரணத்திற்கும்
தியானத்திற்கும்
ஊடான
குறுக்குவெட்டுப்பாதையில்
பயணிப்பது
பரமசுகம் இல்லையா
உன்னோடு பேசுவதை
உளறல் என்றால்
வா நாம் கோமாவுக்குப் போவோம்
வினோதமாய்
நிறம் மாறும்
இவர்களிடையே
என்னை
மீளக்கையளித்துவிடாதே
என் அன்பே

_காலச்சுவடு183
மார்ச் 2015

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...