Monday 11 November 2019

திருவருணைக் காப்பு


முன்னங்கால்கள் இல்லாத நாய்க்குட்டி
தன்னிடம் உள்ளதென்றாள்.

’கருணையம்மா கருணை’ என்றேன்.

’பின்னங்காலிரண்டும் நசுங்கி விட்ட
பூனையொன்றும் என் பிள்ளை’ என்றதும்தான்
’அருணை அருணை’
என்றந்தக் கைகளை பிடித்துக் கொண்டேன்.

’தரையுரசும் பூனைமுலைக்கு
பளிங்குத்தள வீடு பார்த்தோம்’
என்றவள் சொன்ன போது
வாயிழந்து கரங்குவித்தேன்.

மாலைக் கண் நோய் கொண்ட
இன்னுமொரு நாய்க்குட்டி
உண்டெனச் சொல்லுகையில்
உடைந்திருந்தேன்.

‘கருப்பு வெள்ளைக் காட்சிகளில்
வெள்ளை மட்டும் மங்கி விடும்
மற்றபடிக் குறையில்லை ‘ என்றாளே

உள்ளத் திருவோட்டில்
ஒரு பருக்கை கூட இல்லை.

ஐயன்மீர்!
தங்கள் வசம் உள்ளவற்றில்
நல்லதொரு சொல் இடுக

அன்னையின் முழுக்கிற்கு இன்னும்
ஆயிரஞ்சொல் வேண்டும்!





No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...