Monday 27 April 2020

நான்கு சக்கரங்களில் நகரும் குட்டியானை

வெற்றிநடைபோடும் சிக்கல் வாழ்க்கையில்
ஓட்டுனர் சுமையாள் என்னும்
இருவேடங்களைத்தாங்கி
வலம்வரும் நஞ்சப்பன்

தனது குட்டி யானையின் நெற்றியில்
சிங்கம்லே
என்றெழுதி வைத்திருக்கிறார்

கடவுள்துணை என்பதாகவும்
ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் அவர்
கடவுள் தனியாக இருப்பது நல்லதல்ல எனக்கண்டு
புலிக்குட்டி எலிக்குட்டி என
பெயரன் பெயர்த்திகளின்
செல்லப்பெயர்களையும் இட்டு வைத்திருக்கிறார்

மாதத்தவணைகளில் துவங்கி
லொட்டு லொசுக்குகளில்
தொடரும் பட்டியல்
வாகனத்தின் முன் நீளுகிறதொரு
நெடுஞ்சாலையென

எத்தனையாவது ஆயிரம் கிலோமீட்டரில்
அது முடிவுறும் என்பதுதான் பெருங்கேள்வி

ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில்
அசந்துறங்கும் சிங்கத்தின் மேலேறி
வலையிழைகள் அறுந்து விழும்படிக்கு
விளையாடுகிறது சுண்டெலி.

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...