Wednesday 17 September 2014

எங்கே இருக்கிறது குதிரைக்குட்டி


மகனின் கையெழுத்துக்களை
நேர்த்தியாக்கும் முயற்சியில்
அந்த விளையாட்டைத் துவங்கினேன்
ஓ_வை சரியாக எழுதினால் யானை முகம் தெரியும்
-ல் வைக்கலாம் பொங்கல் பானையை என்றதும்
பற்றிக் கொண்டது  கற்பூரம்.
உயிரெழுத்துக்கள் மெய்யாகவே உருவங்களாய் உயிர்த்தன
கழியில் கட்டப்பட்டிருந்த அன்னம் கழுத்தை சொறிகிறது அகரத்தில்                      
பத்மாசனத்தை பயிற்சிசெய்கிறது இரவின் முதல் எழுத்து
தாய்க்குதிரை ஏணியின் கடையெழுத்து
தேனியின் பிற்பாதியில் நிற்கிறது அதன் செல்லக் குட்டி                            
உகரம் நாகம்தான் என்பதை ஆட்சேபித்தவன்
அதனை லாரி மாதிரி இருக்கிறது என்றான்
ஊ- தண்ணீர் லாரியாம்
போ’- நன்றாய்ப் பாருங்கள் தொலைபேசியின்
ஒலிவாங்கியை கீழே வைத்திருக்கிறார்கள்
ந- காகம் த- புறா
தீயும் நீயும் கொண்டைக் கிளிகளாகிப் பறந்துவிட
மகரம் கப்பலாகி மிதக்கத் துவங்குமுன்
ழகரம் தன் கத்தியால் நீரைக்கிழித்து விரைகிறது
புழுக்களென நெளியும் லகரங்களை விட்டு விலகி
மேய்ச்சலைத் தொடரும் ளகர ஜாதி ஆடுகள்
நித்ய கல்யாணியாக தெருவெங்கும் மலர்ந்திருக்கிறது ‘ஐப்பூக்கள்
திலகம் வைத்து அலங்காரமாய் நிற்கின்றனர் மெய்யெழுத்துப் பெண்கள்!




No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...