Friday 7 February 2020

தைரியத்திருவாளன்


காவல்காரத் தாத்தனின்
புகை வளையல்களில் 
கை நுழைக்கிறாள் 
அரூபப்பேத்தி.
நூற்றுக்கணக்கில் 
விதைத்தும் 
சொற்ப மணிகளே 
அறுவடையாகும் 
ஹாலோ பிளாக் 
அவென்யூக்களில் 
சல்யூட் பண்ணும் 
எலியின் சர்க்கஸ் 
பழைய சாகஸம்
வீடு கைவிட்டாலும்
அடைக்கலந்தரும் 
வாசல்கள் உண்டே 
என்கிறது 
எழுந்து நிற்கும் சவப்பெட்டி
ஒருக்களித்த 
வாழ்வுக்கும்
ஜால்ரா போட 
ஒரு சைக்கிள்
வேலைமுடிந்து 
வருகையில் 
பூ வாங்கித் திரும்புவது 
ஒருகாலம்.
கீரைக்கட்டுகளுடன்
வளைக்குள் சேர்கிறாய்.
அகாலத்தில் 
இப்படி கை நீட்டுகிறவனை
சந்தேகமாக பார்க்காதே 
வாட்சுமேன் தாத்தா
நரைநெஞ்சத்தணலின் 
கொஞ்சத்தை
இந்த பீடிக்கு நெருப்பாக்கு
ஒன்று சொல்லவா
உலோக மரங்களின் 
ஒற்றைக் காய்களும்
பழுத்து ஒழுகும் 
இந்தப் பொழுதின் 
ராயன் நீதான்
சும்மா
கோலை சுழற்றி 
சுவற்றில் அடி 
எந்த நாய் வருமென்று 
நான் பார்க்கிறேன்.






No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...